‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2021-12-08 19:44 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரடு, முரடான சாலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை அருகே உள்ள திருகலசநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை போடப்பட்டது. அந்த சாலை தற்போது கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் சாலையோரத்தை திறந்த வெளி கழிவறைபோல பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில் சிதறி கிடக்கும் கற்களால் கீழே தவறி விழும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரடு, முரடாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ராமகிருஷ்ணன், திருகலசநல்லூர்.

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

தஞ்சை அருகே வாழமர்க்கோட்டை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து தஞ்சைக்கு ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலம் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுவதால் அதில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு நடக்குமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதி மக்களின் நலனுக்காக கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
-பொதுமக்கள், வாழமர்க்கோட்டை.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா ஏராகரம் செந்தமிழ் நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த மக்களின் பயனுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி இடிந்து கீழே விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-பொதுமக்கள், செந்தமிழ்நகர்.

மேலும் செய்திகள்