தடுப்பு சுவரில் கார் மோதல்; திருமண கோஷ்டியினர் 6 பேர் படுகாயம்

நெல்லை அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் திருமண கோஷ்டியினர் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-12-08 19:45 GMT
நெல்லை:
நெல்லை அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் திருமண கோஷ்டியினர் 6 பேர் படுகாயமடைந்தனர்.

திருமண கோஷ்டியினர் சென்ற கார்

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் விக்டர் (வயது 28). இவர் நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நடந்த உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, உறவினர்களுடன் காரில் புறப்பட்டு சென்றார். அந்த காரை விக்டர் ஓட்டிச் சென்றார்.

நெல்லை அருகே கங்கைகொண்டான் துறையூர் நான்கு வழிச்சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் கார் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

6 பேர் படுகாயம்

இதில் காரில் இருந்த விக்டர், அவருடைய உறவினர்களான கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி (27), சுரேஷ் (21), சூர்யா (7), சிவராஜ் (25), பால்பாண்டி (32) ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 6 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்