இது புதர்காடு அல்ல... தூர்வாராத கண்மாய்

திருமங்கலம் அருகே உள்ள பண்ணிக்குண்டு கிராமத்தில் உள்ள இந்த கண்மாய் தூர்வாரப்படாததால் புதர்காடுகளாக காட்சியளிக்கிறது.

Update: 2021-12-19 20:35 GMT
திருமங்கலம்,

படத்தை பார்த்ததும் இது ஏதோ புதர்காடு என்று நினைத்து விடாதீர்கள். தூர்வாரப்படாத கண்மாய் தான் இப்படி காட்சியளிக்கிறது. திருமங்கலம் அருகே உள்ள பண்ணிக்குண்டு கிராமத்தில் உள்ள இந்த கண்மாய் தூர்வாரப்படாததால் புதர்காடுகளாக காட்சியளிக்கிறது.
 இந்த கண்மாய்க்கு தொக்கம்பட்டி, நக்கலாகோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வரத்துக்கால்வாய் மூலம் தண்ணீர் வரும்.  இந்தப் பகுதியில் இருந்து வரும் வரத்துக்கால்வாய் சீமைக்கருவேலமரங்கள் சூழ்ந்து காணப்பட்டதாலும், மண்மேடுகள் காரணமாகவும் கண்மாயில் இன்னும் நிரம்பவில்லை.  இந்த கண்மாயை நம்பி சுமார் 500 ஏக்கருக்கும் மேல் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது தூர்வாரப்படாத கண்மாயில் குறைந்தளவே தண்ணீர் இருப்பதால் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் கண்மாய், அதன் வரத்து கால்வாய்களை தூர்வாரினால் மழைக்காலத்தில் கண்மாய் நிரம்பி காணப்படும். அப்போது இந்த பகுதியில், விவசாயம் செழிக்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்