கச்சிராயப்பாளையம் மாதவச்சேரி சாலையில் மது பிரியர்கள் குடிபோதையில் கேலி செய்கிறார்கள் பள்ளி மாணவிகள் போலீஸ் நிலையத்தில் புகார்

கச்சிராயப்பாளையம் மாதவச்சேரி சாலையில் மது பிரியர்கள் குடிபோதையில் கேலி செய்கிறார்கள் பள்ளி மாணவிகள் போலீஸ் நிலையத்தில் புகார்

Update: 2021-12-20 15:35 GMT
கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாதவச்சேரி, சிவகங்கை ஆகிய  கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சைக்கிள் மற்றும் அரசு பஸ்களில் கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் மாதவச்சேரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது மாதவச்சேரி சாலையில் மது பிரியர்கள் குடிபோதையில் தங்களை கேலி செய்வதாக புகார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் நடந்த சம்பவத்தை மாணவிகள் புகாராக எழுதி கொடுத்தனர். 

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையம் மற்றும் மாதவச்சேரி செல்லும் சாலை அருகே மதுக்கடைகள் செயல்பட்டு வருவதால் கச்சிராயப்பாளையம் முதல் மாதவச்சேரி கிராமம் வரை மது பிரியர்கள் சாலையோரம் அமர்ந்து மது குடித்துவிட்டு போதையில் சைக்கிளில் செல்லும் எங்களை கேலி செய்கிறார்கள். சாலையில் செல்லும்போது அச்சத்துடனேயே சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் எங்களால் தனியாக செல்ல முடியவில்லை. மேலும் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை சாலையில் போட்டு உடைக்கிறார்கள். இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள் என்றனர்.

மேலும் செய்திகள்