புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்-மாமனார் கைது

குளித்தலை அருகே புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்-மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-01 18:40 GMT
நச்சலூர், 
திருமணம்
குளித்தலை நாரப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் பெரியபாலத்தில் உள்ள ஆற்றுபாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகாதேவன் மகள் கோமதிக்கும் (23) கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கடம்பர்கோவில் ஆற்று விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு கதவை பூட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
இதனால் அதிர்ச்சி அடைந்த கோமதி குளித்தலை பெரியபாலத்தில் உள்ள ஆற்றுபாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் சென்று வீட்டு சாவியை கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டனின் தந்தை லோகநாதன் (55) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளார். 
பின்னர் மணிகண்டன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கோமதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
2 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கோமதி புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மணிகண்டன் மற்றும் அவரின் தந்தை லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தார். 
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்