புதிதாக 1,033 பேருக்கு வைரஸ்: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.

Update: 2022-01-01 21:25 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 225 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,033 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 810 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தட்சிண கன்னடாவில் 48 பேர், மைசூருவில் 29 பேர், உடுப்பியில் 28 பேர், மண்டியாவில் 23 பேர் உள்பட 21 மாவட்டங்களில் பாதிப்பு பதிவாகி உள்ளது. 9 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை.

இதுவரை 30 லட்சத்து 8 ஆயிரத்து 370 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு நகரில் 2 பேர், மண்டியா, துமகூரு, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் என மேலும் 5 பேர் இறந்தனர். 27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 340 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 354 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 29 லட்சத்து 60 ஆயிரத்து 615 பேர் குணம் அடைந்து உள்ளனர். 9 ஆயிரத்து 386 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக தினசரி கொரோன பாதிப்பு 500-க்கும் கீழ் பதிவாகி வந்தது. நேற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. கர்நாடகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு சுகாதாரத்துறையையும், அரசையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

மேலும் செய்திகள்