கறம்பக்குடி பகுதியில் மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம் விற்பனை களைகட்டியது

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கறம்பக்குடி பகுதியில் மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். விற்பனையும் களைகட்டி உள்ளது.

Update: 2022-01-06 16:57 GMT
கறம்பக்குடி:
பொங்கல் திருநாள் 
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களில் பொங்கல் திருநாள் தான் தமிழ் கலாசாரத்தின் வெளிப்பாடாகவும், உழைப்பின் மேன்மையை உணர்த்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில்தான் டிஜிட்டல் மயமாகி போன இந்த காலத்திலும் மண்பானைகளில் பொங்கல் வைக்கும் வழக்கம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நடைமுறையில் உள்ளது. இதனால் பொங்கல் வந்தால் மண்பானைகளுக்கு தனி மவுசு ஏற்படுவது வழக்கம்.
மண்பானைகள் விற்பனை 
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர், நாங்கியப்பட்டு, மைலன்கோன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் தயாரிக்கப்படுகின்றன. விதவிதமான டிசைன்களில் கலைநுணுக்கத்துடன் தயாரிக்கப்படும் இப்பகுதி மண்பாண்டங்களுக்கு வெளிமாவட்டங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்மழையால் தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மழை நின்று உள்ளதால் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மண்பானைகள் தவிர மண் அடுப்புகள், சட்டிகள், ஜாடிகள் என பலவிதமான பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கறம்பக்குடி சந்தையில் மண்பானைகள் விற்பனை களைகட்டி உள்ளது. வெளியூர் வியாபாரிகள் கறம்பக்குடி பகுதிக்கு வந்து மண்பாண்டங்களை வாங்கி செல்கின்றனர்.
கோரிக்கை 
இதுகுறித்து மழையூர் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி கூறுகையில், கொரோனா ஊரடங்கு, மழை வெள்ளம் என கடந்த 2 ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இருப்பினும் பாரம்பரிய தொழிலை விட மனம் இன்றி கஷ்டமான நிலையிலும் மண்பாண்டங்களை தயாரித்து வருகிறோம். உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லை. தொழில்கூடம் இல்லாததால் மழை காலங்களில் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்தார்.  நலிந்துவரும் மண்பாண்ட தொழிலுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வடகாடு
வடகாடு பகுதியில் வர   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகளை விற்பனைக்காக மண் பானை வியாபாரிகள் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மூலமாக, ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருப்பதால்  மண் பானைகள் மற்றும் விறகு அடுப்புகள், மண் சட்டிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்