சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

பாளையங்கோட்டையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.

Update: 2022-01-06 19:30 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே அரியகுளம் ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி ஹெலன் கீதா (வயது 30). இவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென ஹெலன் கீதா அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்து பறிக்க முயன்றார். உடனே தனது நகையை கைகளால் இறுக பிடித்து கொண்டு ஹெலன் கீதா கூச்சலிட்டு போராடினார். இதில் நகை 2 துண்டானது. 
மர்மநபரின் கையில் கிடைத்த 2¼ பவுனுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்