விழுப்புரம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 20 வாகனங்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-08 16:59 GMT

விழுப்புரம், 

தமிழகத்தில் தற்போது கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஒரு கட்டமாக கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதுதவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தாலோ மற்றும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறி யாரேனும் சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிகிறார்களா என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதில் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றியதாக 16 இருசக்கர வாகனங்கள், 4 கார்கள் என மொத்தம் 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மேலும் கடந்த 2 நாட்களில் முககவசம் அணியாமல் வந்த 200 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்