வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கைதான தாசில்தாருக்கு நிபந்தனை ஜாமீன்

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கைதான தாசில்தாருக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை கோர்ட்டு உத்தரவு.

Update: 2022-01-09 23:58 GMT
சென்னை,

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பதாஸ். இவர், தனது அத்தை அழகுமணிக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு அயனாவரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வாரிசு சான்றிதழ் வழங்க, வருவாய் ஆய்வாளர் பொன்னி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து புஷ்பதாஸ் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுறுத்தல்படி கடந்த மாதம் 28-ந் தேதி லஞ்சப்பணத்தை புஷ்பதாஸ் கொடுத்தபோது அதை பெற்றுக்கொண்ட வருவாய் ஆய்வாளர் பொன்னியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அயனாவரம் தாசில்தார் சின்னத்துரை தூண்டுதலின்பேரில் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து சின்னத்துரை மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரையும் கைது செய்தனர். இந்தநிலையில் தாசில்தார் சின்னத்துரை, ஜாமீன் கோரி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், தாசில்தார் சின்னத்துரைக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஒரு மாதத்துக்கு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், விசாரணைக்கு தேவைப்படும்போது லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.

மேலும் செய்திகள்