நாகையில், பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்ததை கண்டித்து நாகையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-12 16:45 GMT
வெளிப்பாளையம்:-

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்ததை கண்டித்து நாகையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பஞ்சாப் நிகழ்ச்சி ரத்து

பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று ரூ.42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். 
இந்த நிலையில் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பிரதமர் தனது நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு பஞ்சாப்பில் இருந்து உடனடியாக திரும்ப நேரிட்டது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆர்ப்பாட்டம்

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற நிலையில் அங்கு பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குளறுபடியை கண்டித்து நாகை அவுரித்திடலில் பா.ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் இளமுருகன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ராஜா கலந்து கொண்டு பேசினார். இதில் நகர தலைவர் இளஞ்சேரலாதன், பொதுச் செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்