நாளை பொங்கல் பண்டிகை: கரும்பு, மஞ்சள் குலை விற்பனை அமோகம் காப்புக்கட்டு பூக்களையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கினர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் கரும்பு, மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ விற்பனை அமோகமாக நடந்தது. காப்புக்கட்டு பூக்களையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கினர்.

Update: 2022-01-12 21:35 GMT
சேலம்,
விற்பனை மும்முரம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று வீடுகள் தோறும் அதிகாலையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு அனைத்து வகையான காய்கறிகள், கரும்பு, மஞ்சள் குலை போன்றவை படைத்து வழிபடுவது வழக்கம்.
சேலம் மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கடை வீதி உள்பட பல்வேறு இடங்களில் பொங்கல் வைப்பதற்கான மண்பானைகள், கரும்பு, மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ மற்றும் பூஜை பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் கரும்பு, மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ விற்பனை மும்முரமாக நடந்தது.
காப்புக்கட்டு பூ
ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் அஸ்தம்பட்டி, பெரமனூர், பொன்னம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை மார்க்கெட், வின்சென்ட், ஏற்காடு சாலை போன்ற பகுதிகளில் ஆவாரம்பூ, பூலாம்பூ, பன்னப்பூ மற்றும் வேப்பிலை அடங்கிய காப்புக்கட்டு பூ விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் வீட்டுக்கு வாங்கி சென்றனர். ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் கரும்பு விற்பனையும் அமோகமாக நடந்தது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் கரும்புகளை விற்பனை செய்வதற்காக சேலத்திற்கு வியாபாரிகள் கொண்டு வந்துள்ளனர். ஒரு ஜோடி கரும்பு ரூ.120 முதல் ரூ.130 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறிய கரும்புகள் ஜோடி ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஜவுளிக்கடையிலும் கூட்டம்
சேலம் கடைவீதி மற்றும் வின்சென்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் கலர், கலராக வர்ணம் பூசிய மண்பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை அன்று பெரும்பாலானோர் மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைப்பதால் மண்பானை விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் ஜவுளிக்கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் செய்திகள்