ராமேசுவரம் மீனவர்கள் 43 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் தவித்து வரும் ராமேசுவரம் மீனவர்கள் 43 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது

Update: 2022-01-13 14:47 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 18-ந்தேதி மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்கள் மற்றும் 6 விசைப்படகுகளை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 43 மீனவர்கள் நேற்று மீண்டும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
அப்போது, 43 மீனவர்களையும் வருகிற 25-ந்தேதி வரையிலும் மீண்டும் சிறையில் அடைக்க காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து 43 மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மண்டபம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில் ராமேசுவரம் மீனவர்களும் பொங்கல் பண்டிகையையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் அவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்