உரிமம் பெறாத தண்ணீர் கேன்கள் பறிமுதல்
நாகையில் வீடுகளுக்கு வினியோகிப்பதற்காக சரக்கு ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்ட உரிமம் பெறாத தண்ணீர் கேன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:-
நாகையில் வீடுகளுக்கு வினியோகிப்பதற்காக சரக்கு ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்ட உரிமம் பெறாத தண்ணீர் கேன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தண்ணீர் கேன்கள் பறிமுதல்
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தண்ணீர் கேன் ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர்.
இதில் சரக்கு ஆட்டோவில் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாமல் 20 லிட்டர் கொண்ட 50 தண்ணீர் கேன்கள் வீடுகளுக்கு வினியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
எச்சரிக்கை
மேலும் மூடியில் ‘சீல்’ வைக்காமல், காலாவதி தேதி இல்லாமல், வெளிமாவட்ட முகவரியுடன் அந்த கேன்கள் இருப்பது தெரியவந்தது. குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த 50 கேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, கீழே ஊற்ற அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட தண்ணீர் கம்பெனிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.