முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு உணவுகள் வழங்கி பொங்கல் கொண்டாட்டம்

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு மலர் மாலை அணிவித்து சிறப்பு உணவுகள் அளித்து பொங்கல் கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-15 15:30 GMT
கூடலூர்

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு மலர் மாலை அணிவித்து சிறப்பு உணவுகள் அளித்து பொங்கல் கொண்டாடப்பட்டது.

முதுமலையில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இது தவிர முதுமலை தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் முதுமலை தெப்பக்காடு முகாமில் பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. இதையொட்டி யானைகளை பாகன்கள் மாயார் ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டினர். பின்னர் சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரித்தனர். தொடர்ந்து முகாமில் சமூக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டன. அதற்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. 

கலெக்டர் வழங்கினார்

தொடர்ந்து சர்க்கரை மற்றும் வெண் பொங்கல், கரும்புகள், மாதுளை, ஆப்பிள், அன்னாசி, தேங்காய் உள்ளிட்ட சிறப்பு உணவுகைள வனத்துறை யினர் தயார் செய்து வைத்தனர். இந்த யானைகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் பலர் அங்கு வந்து இருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று வளர்ப்பு யானைகளை பார்த்து மகிழ்ந்தனர். 

பின்னர் மாவட்ட கலெக்டர் எஸ்.பி. அம்ரித் குடும்பத்தினருடன் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வந்தார். அவர் பழங்கள் உள்ளிட்ட சிறப்பு உணவுகளை கலெக்டர் எஸ்.பி. அம்ரித் வளர்ப்பு யானைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து அனைத்து வளர்ப்பு யானைகளுக்கும் சிறப்பு உணவுகள் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன. அதை அந்த யானைகள் ஆவலுடன் சாப்பிட்டன.

 இந்த நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண், வனச்சரகர்கள் மனோகரன், விஜயன், மனோஜ் குமார், மாரியப்பன், முரளி உள்பட வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்