வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் திருட்டு

கோட்டக்குப்பத்தில் வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

Update: 2022-01-18 16:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் தவுலத் நகர் பகுதியை சேர்ந்தவர் பூபதிராஜன் (வயது 35). இவர் கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15-ந் தேதியன்று மாலை வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் அவர், கோட்டக்குப்பம் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4½ பவுன் நகை, ரூ.18 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  திருட்டுப்போன நகை, வெள்ளிப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1¾ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்