ஜேடர்பாளையம் அருகே துணிகரம்: விவசாயி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஜேடர்பாளையம் அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-01-20 16:25 GMT
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம்‌ அருகே உள்ள குறும்பலமகாதேவி கிராமம் நரிமேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி பூங்கொடி (63). கணவன், மனைவி இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு ஜேடர்பாளையம் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு மதியம் வீட்டிற்கு வந்தபோது ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை கீழே தள்ளி உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. 
வலைவீச்சு
இதுகுறித்து காளியப்பன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும்  கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று வீட்டில் பதிவாகி இருந்த தடையங்களை சேகரித்தனர்.  
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்