பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர்

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2022-01-23 11:02 GMT
சென்னை மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 77). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இவருடைய குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்ததால், சில நாட்களாக கோபாலகிருஷ்ணன் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். வீட்டின் உள்ளே கோபாலகிருஷ்ணன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மயிலாப்பூர் போலீசார், கோபாலகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்