நரிக்குடி பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரம்

நரிக்குடி பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-01-23 19:49 GMT
காரியாபட்டி, 
நரிக்குடி பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நெல் சாகுபடி 
 நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இந்த பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்று இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பாப்பான்குளம் நல்லுகுறிச்சி, வேலங்குடி, இருஞ்சிறை, உலக்குடி, பனைக்குடி, நாலூர், வேளானேரி, எஸ். வல்லகுளம் ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.
கொள்முதல் நிலையம் 
ஆனால் வேலங்குடி, நாலூர், இருஞ்சிறை, உள்பட பல்வேறு இடங்களில் இதுவரை அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படாததால் விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். 
சென்ற ஆண்டு கிழவிகுளம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த பகுதியில் சீனிக்காரேந்தல், பிரண்டைக்குளம், ஆலங்குளம், கடம்பன்குளம், தேளி, கணையமறித்தான், முள்ளிக்குடி, சின்னகண்ணனூர் ஆகிய பகுதிகளில் 3000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு உள்ளனர். இந்த பகுதியிலும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே நரிக்குடி பகுதியில் விரைவில் அரசு கொள்முதல் நிலையம் தொடங்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்