எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது- உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை

புலிகள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்ததால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது கிடைத்து உள்ளது. உலக அளவில் முதல் இடம் பிடித்ததால் இந்த விருது வழங்கப்படுகிறது.

Update: 2022-01-25 21:14 GMT
தாளவாடி
புலிகள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்ததால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது கிடைத்து உள்ளது. உலக அளவில் முதல் இடம் பிடித்ததால் இந்த விருது வழங்கப்படுகிறது. 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 
நீலகிரி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 1,455 ஏக்கர் வனப்பரப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்து உள்ளது. அடர்ந்த காடு, நீரோடைகள், புலிகள் வாழ்வதற்கான தட்ப வெப்பநிலை கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. 
2 மடங்குக்கும் அதிகமாக...
இதேபோல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையொட்டி முதுமலை, பந்திப்பூர், பி.ஆர்.ஹில்ஸ், ஈரோடு மற்றும் கோவை வனப்பிரிவு, மலை மாதேஸ்வரர் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளதால் புலிகள் எளிதாக பிற இடங்களுக்கு புலம் பெயர்ந்து இரை தேடியும் புதிய எல்லையில் வாழவும் முடிகிறது. இதனால் புலிகள் எண்ணிக்கை தற்போது 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 30 புலிகளாக இருந்த காப்பகத்தில் தற்போது 80 புலிகள் உள்ளது தெரியவந்து உள்ளது. 
13 கூட்டமைப்புகள்
உலகளவில் புலிகளை பாதுகாப்பதற்கு ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள கன்சர்வேஷன் அண்டு டைகர், டைகர் ஸ்டேன்டர்டு, வேல்டு லைப் கன்சர்வேஷன் ஆப் சொசைட்டி, உலகளாவிய நிதியகம் என 13 அமைப்புகள் கூட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளன. 
இந்த கூட்டமைப்பு 2010-ம் ஆண்டு 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்டது. மேலும் 2022-ம் ஆண்டில் புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்திய நாட்டுக்கு டி.எஸ்-2 எனும் சர்வதேச விருது வழங்கப்படும் எனவும் கூட்டமைப்பு அறிவித்தது.
சர்வதேச விருது
அதன்படி சர்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தியதற்காக டி.எஸ்-2 என்ற விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெற்று சாதனை படைத்து உள்ளது.  அதாவது உலக அளவில் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் முதலிடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 2-வது இடத்தை நேபாளம் நாட்டில் உள்ள பார்டியா தேசிய பூங்கா பெற்று உள்ளது.
தமிழக அரசின் ஒத்துழைப்பு, வனத்துறையின் முயற்சி, பழங்குடியின மக்களின் ஆதரவு போன்றவற்றால் புலிகள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து உள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக காணொலி காட்சி மூலம் தமிழக அரசுக்கு இந்த விருதை கூட்டமைப்புகள் இன்று (புதன்கிழமை) வழங்க உள்ளது. 

மேலும் செய்திகள்