பண்ணாரி சோதனை சாவடியில் ரூ.16½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்- மைசூருவை சேர்ந்த 2 பேர் கைது

பண்ணாரி சோதனை சாவடியில் ரூ.16½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக மைசூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-28 22:12 GMT
சத்தியமங்கலம்
பண்ணாரி சோதனை சாவடியில் ரூ.16½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக மைசூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து 2 சரக்கு வேன்கள் வந்து கொண்டிருந்தது. அந்த சரக்கு வேன்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் 2 வாகனங்களிலும் 75 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் 2 டிரைவர்களிடமும் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு முட்டைக்கோஸ் ஏற்றிச் செல்வதாக தெரிவித்தனர்.
இருப்பினும்  சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேன்களில் இருந்த அனைத்து மூட்டைகளையும் கீழே இறக்கினார்கள். பின்னர் மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.16 லட்சத்து 42 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
பறிமுதல்
பின்னர் 2 டிரைவர்களிடம் போலீசார்  விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் அவர்கள் ைமசூருவை சேர்ந்த பிரசன்னா (வயது 30), மற்றொருவர் சுதாகர் (30)  என்பதும், 2 பேரும் புகையிலை பொருட்களை முட்டைக்கோஸ் மூட்டைக்குள் மறைத்து வைத்து கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை மூட்டைகளுடன் 2 சரக்கு வேன்களையும் பறிமுதல் செய்தனர். 
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்