2 நாளில் 140 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதியில் 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு பணியில் 140 பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-01-29 17:28 GMT
கடலூர், 

வருடந்தோறும் அக்டோபர் மாதம்முதல் ஜனவரி மாதம் வரை கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு இனங்களை சேர்ந்த பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து செல்கின்றன. இந்த பறவை இனங்களை கணக்கெடுப்பு செய்யும் பணியில் தமிழ்நாடு வனத்துறை ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் கடலூர் மாவட்ட வன அலுவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் உள்ள சுரபுன்னை காடுகள், சவுக்கு மரக்காடுகள் மற்றும் பல்வேறு வகையான காட்டுப்பகுதிகளில் நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதையொட்டி சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

140 பறவை இனங்கள்

இதுகுறித்து வனச்சரக அலுவலர் ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தேவனாம்பட்டினம் சுற்று வட்டார பகுதியில் 55 பறவை இனத்தை சேர்ந்த 625 பறவைகளும், பிச்சாவரம் சுற்று வட்டார பகுதியில் 85 பறவை இனங்களை சேர்ந்த 4,500 பறவைகளும் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வாரம்    ஆற்றங்கரையோர பகுதிகளில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்