பஞ்சு மெத்தை உற்பத்தி நிறுவனத்தில் தீ

அவனியாபுரம் அருகே பஞ்சு மெத்தை உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-01-30 20:35 GMT
மதுரை,

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக் (வயது 32). இவர் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை நாள் என்பதால், ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை.
இந்தநிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் அந்த நிறுவனத்தில் இருந்து அதிக புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், உரிமையாளர் உமர்பரூக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, அவர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். நிறுவனத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவினால் தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரியவருகிறது.

மேலும் செய்திகள்