சொத்து பிரச்சினையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

ஆத்தூர் அருகே சொத்து பிரச்சினையில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டார்

Update: 2022-02-23 14:47 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள மேலசேர்ந்தபூமங்கலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சைப் பெருமாள்.
இவருக்கு 3 மனைவிகள். இதில் ஒரு மனைவியின் மகன் சின்னத்துரை, மற்றொரு மனைவியின் மகன் முனியசாமி, 3-வது மனைவிக்கு 2 மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சை பெருமாள் இறந்து விட்டார். இதை தொடர்ந்து அவரது சொத்துக்களை பாகம் பிரிப்பது தொடர்பாக முனியசாமி குடும்பத்திற்கும்,  சின்னத்துரை குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னத்துரையின் மகன் டார்வின் (வயது 23) ஆத்தூர் மெயின் பஜாரில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நண்பரான முக்காணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் வெங்கடேசன் என்பவரோடு பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு டார்வின் சகோதரர் தீபன் மற்றும் அவரது நெருங்கிய உறவினரான தனசேகரன் ஆகியோர் இருந்து உள்ளனர்.
அப்போது அங்கு வந்த முனியசாமி அரிவாளால் டார்வினை தலை கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
மேலும் அதை தடுக்க முயன்ற வெங்கடேசனுக்கும் வெட்டு  விழுந்துள்ளது. அருகில் நின்று கொண்டிருந்த தீபனும், தனசேகரனும் ஓடிவருவதை பார்த்த முனியசாமி தப்பி ஓடிவிட்டாராம். அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப்பதிவு செய்து முனியசாமியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்