ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-03-13 15:21 GMT
ஊட்டி

சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

தற்போது சமவெளி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால்  சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 

இது கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நீண்ட வரிசை

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மோட்டார் படகுகளில் சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மிதி படகு, துடுப்பு படகுகளில் குடும்பத்துடன் சவாரி செய்து குதூகலம் அடைந்தனர்.

 காட்சி மாடங்களில் நின்றபடி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். ஏரியின் நடுவே அமைக்கப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சியை பார்வை யிட்டனர். 
சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி மேற்கொண்டும், குதிரை சவாரி மீது அமர்ந்து புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

 ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பூங்கா முன்பு மலர் அலங்காரத்து டன் கூடிய மாதிரி சைக்கிள்கள் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கண்டு ரசிப்பு

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் படகு இல்ல சாலை, தாவரவியல் பூங்கா சாலை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்