கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-04-23 15:03 GMT
கன்னியாகுமரி, 
விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் கூட்டம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்காணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும். 
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பர். பின்னர், கடலின் நடவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து திரும்புவது வழக்கம்.
படகில் சென்று...
இந்தநிலையில் அதிகாலையிலும் கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள், ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். ஆனால், மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை. 
பின்னர், அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 
அதைதொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்தனர். 
போலீஸ் பாதுகாப்பு
இதேபோல், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
 கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா பாதுகாவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்