திருநங்கை கொலை வழக்கில் 5 பேர் கைது

பெங்களூரு அருகே திருநங்கையை கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் சைது செய்துள்ளனர்.

Update: 2022-04-30 15:29 GMT
பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மகாதேவபுரா பகுதியில் வசித்து வந்தவர் அனிகா என்கிற சுமந்த்(வயது 23). இவர் திருநங்கை ஆவார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு ஓட்டலுக்கு சென்று உணவு வாங்கி வந்த அனிகாவை ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது. இதுகுறித்து நெலமங்களா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

மேலும் கொலையாளிகளை பிடிக்க கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள 700 கண்காணிப்பு கேமராக்கள், 3 ஆயிரம் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் சந்தோஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையின் போது அனிகாவை தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கொலை செய்ததை சந்தோஷ் ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.
 
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அனிகா, சந்தோசிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் பணம் கொடுக்க சந்தோஷ் மறுத்ததால் அனிகா, சந்தோசை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதனால் சந்தோஷ் தனது நண்பர்களான மகேஷ், மணிகண்டா, நவீன், குமாருடன் சேர்ந்து அனிகாவை தீர்த்துக்கட்டியது அம்பலமானது. சந்தோஷ் கொடுத்த தகவலின்பேரின் மகேஷ், மணிகண்டா, நவீன், குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்