ஓசூரில் தனியார் நிறுவன மேற்பார்வையாளரின் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஓசூரில் தனியார் நிறுவன மேற்பார்வையாளரின் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-30 17:27 GMT
ஓசூர்:
ஓசூரில் தனியார் நிறுவன மேற்பார்வையாளரின் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் நிறுவன மேற்பார்வையாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி அருகே செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). இவர் பெங்களூரு அருகே பொம்மசந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு, மின்சார ஸ்கூட்டரை வாங்கி தினமும் வேலைக்கு சென்று வருகிறார். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை இயக்கி வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றார். அப்போது ஸ்கூட்டரின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், வண்டியை நிறுத்தி விட்டு கீழே குதித்து உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் ஸ்கூட்டரின் அனைத்து பகுதிகளிலும் தீ, மளமளவென பரவியது. 
போலீசார் விசாரணை
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ஸ்கூட்டர் முற்றிலும் கருகி சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் விரைந்து சென்று சதீசிடம் விசாரணை நடத்தினர். மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் ஓசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்