கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-05-04 06:54 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது53). இவருக்கு சாந்தி (46) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். எளாவூர் அடுத்த சின்னஓபுளாபுரத்தில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் மூர்த்தி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று ஆரம்பாக்கத்தில் இருந்து எளாவூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் மூர்த்தி சென்று கொண்டிருந்தார். எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அருகே செல்லும் போது அதே திசையில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு கார், மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்