4 ஆண்களை திருமணம் செய்து பணம் பறித்த பெண் கைது

4 ஆண்களை திருமணம் செய்து, அவர்கள் மீது போலி வழக்குகளை பதிவு செய்து பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-04 17:56 GMT
கோப்பு படம்
நாக்பூர், 
4 ஆண்களை திருமணம் செய்து, அவர்கள் மீது போலி வழக்குகளை பதிவு செய்து பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். 
பலரிடம் பணம் பறிப்பு
வார்தா பகுதியை சேர்ந்த பெண் பவிகா என்கிற மேகாலி திலிப் திர்ஜா (வயது35). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மகேந்திர வன்வானி என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். 
இந்நிலையில் பவிகா, மகேந்திர வன்வானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் வழக்கை திரும்ப பெற அவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். 
இதனால் பயந்துபோன மகேந்திர வன்வானி, தனது மானத்தை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி அந்த பெண்ணுக்கு ரூ.4 லட்சத்தை கொடுத்துள்ளார். 
இந்நிலையில், அந்த பெண் இதே பாணியில் பலரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இது குறித்து மகேந்திர வன்வானி போலீசில் புகார் கொடுத்தார். 
கைது
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பவிகா இதேபோல 2003, 2013 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் 3 ஆண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் இதே பாணியில் பணம் பறித்தது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவந்தனர்.  இந்தநிலையில் நாக்பூரில் பதுங்கி இருந்த பவிகாவையும், அவரின் சதி திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த காதலர் ராஜூ மோட்கரே என்பரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 
மேலும், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்