அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலி

புவனகிரி அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-09 17:24 GMT
புவனகிரி, 

பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற சிவப்பிரகாசம்(வயது 47). ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்று முன்தினம் மாலை பரங்கிப்பேட்டை அப்பாசாமி தெருவை சேர்ந்த முத்துக்குமரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சிவப்பிரகாசம் ஓட்டினார்.
முட்லூர்-சிதம்பரம் புறவழிச்சாலை மண்டபம் மெயின் ரோட்டில் வந்தபோது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் சிவப்பிரகாசம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய சிவப்பிரகாசம் தலைநசுங்கி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த முத்துக்குமரன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். 

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான சிவப்பிரகாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான சிவப்பிரகாசத்துக்கு சுகுணா(33) என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். 

மேலும் செய்திகள்