ஓமலூர் அருகே பட்டப்பகலில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை போனது. பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

Update: 2022-05-10 22:22 GMT
ஓமலூர், 
ஓமலூர் அருகே நடந்த இந்த துணிகர கொள்ளை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பாகல்பட்டி ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (41). தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்கொடி (34). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தமிழ்கொடி கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். கனகராஜூம் வேலைக்கு சென்று விட்டார். வேலைக்கு சென்று விட்டு மாலையில் கனகராஜ் வீடு திரும்பினார்.
30 பவுன் கொள்ளை
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கனகராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 30 பவுன் நகைகள் கொள்ளை போனதாக தெரிகிறது. தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனகராஜ் வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள், ஆட்கள் இல்லாததை கண்டு கைவரிசை காட்டியுள்ளனர். இந்த கொள்ளையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை அந்த பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்