குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி

குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-05-11 16:17 GMT
தர்மபுரி:
குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறைந்த வட்டியில் கடன்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 31). கடத்தூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறப்பட்டு இருந்தது.
இதனால் லிங்கேஸ்வரன் குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரித்தார். பின்னர் ரூ.8 லட்சம் கடனாக கேட்டுள்ளார். அந்த தொகையை கடனாக வழங்க ஆவணம் தயாரித்தல், காப்பீடு மற்றும் பல்வேறு செலவுகளுக்கு ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 990 முன்பணமாக செலுத்த வேண்டும் என்று அந்த நபர்கள் கூறியுள்ளனர்.
மோசடி
இதை நம்பி லிங்கேஸ்வரன் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பணத்தை  செலுத்தி உள்ளார். பின்னர் கடன் தொகையை வழங்குமாறு கேட்டபோது கூடுதலாக ரூ.30 ஆயிரம் செலுத்தினால் மட்டுமே கடன் தொகையை விடுவிக்க முடியும் என்று அந்த நபர்கள் தெரிவித்து உள்ளனர். அப்போது தான் அந்த நபர்கள் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. 
இந்த மோசடி குறித்து லிங்கேஸ்வரன் தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்