கரூர் ஜவகர் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

கரூர் ஜவகர் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-05-11 17:26 GMT
கரூர்
கரூர், 
வைகாசி திருவிழா
கரூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகுசிறப்பாக நடைபெறு வது  வழக்கம். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.    இதையடுத்து இந்தாண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 8-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நாள் தோறும் பக்தர்கள் அமராவதி ஆற்றில் நீராடி அங்கிருந்து புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர். 
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
இந்நிலையில் வருகிற 13-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 23 மற்றும் 24-ந்தேதிகளில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். 
இதனால் பக்தர்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி கோவிலுக்கு சென்று வரும் வகையில் முன்னதாக கரூர் கோவை ரோடு மனோகரா கார்னரில் இருந்து ஜவகர் பஜார் வழியாக கருப்பாயி கோவில் தெரு வரை உள்ள சாலைகளின் இருபுறமும் உள்ள நடைமேடைகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளின் விளம்பர பலகைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கரூர் ஜவகர் பகுதியில் பல்வேறு கடைகளில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
பரபரப்பு
கரூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் லட்சுமிவர்மா முன்னிலையில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பொக்லைன் எந்திரம், இதர கருவிகள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கரூர் ஜவகர் பஜார் சாலையின் இருபுறமும் உள்ள நடைமேடைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக தெவித்தனர். இதனால் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்