நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
பவானிசாகர்
ஈரோடு மாவட்டத்தில் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும். கடந்த சில மாதங்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால், அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிஅளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 757 கன அடி தண்ணீர் வந்தது.
நேற்று மாலை 4 மணிஅளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 563 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் குடிநீருக்காகவும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால்களுக்கு பாசனத்துக்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.