லிபியாவில் 2 மாதங்களாக சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

லிபியாவில் சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர்.

Update: 2023-03-05 22:35 GMT

Image Courtesy : @NCM_GoI twitter

புதுடெல்லி,

லிபியா நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக ஒரு முகவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் அவருடன் சென்றனர். சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட அவர்கள், அங்கு போனவுடன் தனியார் நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர்.

கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உணவும் வழங்கப்படவில்லை. அடித்து சித்ரவதை செய்யப்பட்டனர். 2 மாதங்களாக இதே நிலை நீடித்தது. அவர்களை மீட்குமாறு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால்சிங் லால்புராவிடம் சில பஞ்சாப் பிரமுகர்கள் மனு அளித்தனர்.

அவர் அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். துனிஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டது. தூதரகத்தின் உதவியால், முதலில் 4 பேர், அடுத்தபடியாக 8 பேர் என 12 பேரும் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்