நேரடி வரி வாரியத் தலைவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு

மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வரும் சுஷில் சந்திராவிற்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு அனுமதி அளித்துள்ளது.

Update: 2017-05-08 15:53 GMT
புதுடெல்லி

சுஷில் சந்திரா சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இப்பதவியில் இருந்து வருகிறார். பதவி நீட்டிப்பு அடுத்தாண்டு மே 31 ஆம் தேதி வரை நிலைத்திருக்கும். வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்த நீட்டிப்பு அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டு அதிகாரியான சந்திரா ஐஐடியில் படித்தவர். இந்திய வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த குடிமைப்பணி அதிகாரியாவார். சந்திராவுடன் பணி புரியும் இரு வாரிய உறுப்பினர்கள் தலைவர் பதவிக்கு காத்திருந்த நிலையில் மத்திய அரசு இப்பதவி நீட்டிப்பை அவருக்கு வழங்கியுள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய காரணங்களாக கறுப்புப்பணத்திற்கு எதிரான நடவடிக்கையும், வரி அளிப்போருக்கு பரிவான அமைப்பு ஒன்று ஏற்படுத்துவதும் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே நபர் இப்பதவியில் தொடர்வது நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நேரடி வரி வாரியத்தில் ஒரே சமயத்தில் தலைவரும், ஆறு உறுப்பினர்களும் இடம் பெறலாம்.

மேலும் செய்திகள்