ஸ்ரீஜன் ஊழல்: விசாரணையை துவங்கியது சிபிஐ

பிகாரில் நிகழ்ந்துள்ள ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் சிபிஐ தனது விசாரணையை துவங்கியது.

Update: 2017-08-26 09:39 GMT
புதுடெல்லி

தனியார் தொண்டு நிறுவனத்திற்கு ரூ 1000 கோடியை அளித்தது தொடர்பாக பிகாரில் ஊழல் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பிகார் அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. 

பிகார் மாநில காவல்துறையின் பொருளதார குற்றங்கள் தொடர்பான துறை விசாரணையை நடத்தியது. அதைத் தொடர்ந்து சிபிஐ 10 முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது. முதல் தகவல் அறிக்கைகள் ஸ்ரீஜன் மகிளா விகாஸ் சமிதி என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர்-இயக்குநர் மனோரமா தேவி என்பவருக்கும் அந்த அமைப்பின் அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் சமீபத்தில் மனோரமா தேவி இறந்து விட்டார். 

விசாரணை நடத்தத் தேவையான ஆவணங்களை சிபிஐ பிகார் அரசிடமிருந்து பெற்றதும், மத்திய அரசின் அனுமதியை பெற்று விசாரணை துவங்கியுள்ளது. 

இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் பாகல்பூரில் பிகார் அரசின் ரூ 950 கோடியை சுரண்டியதாக குற்றஞ்சாட்டிய பிகார் காவல்துறை தற்போது நிறுவனத்தை இயக்கி வரும் பிரியா குமார் மற்றும் அவரது கணவர் அமித் குமாருக்கு எதிராக தேடப்படுவோர் என்ற அறிவிக்கையையும் விடுத்துள்ளது. பிரியா குமார் நிறுவனத்தை நிறுவியவரும் முன்னாள் இயக்குநருமான மனோரமா தேவியின் மருமகள் ஆவார். 

மேலும் செய்திகள்