ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரெயில்வே துறை செயல்பட்டு வருகிறது. அதிகப்படியான ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 78 நாட்கள் உற்பத்தி சார்ந்த போனசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரெயில்வே ஊழியர்களுக்கான போனஸ் வழங்குவது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது ரெயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியிருப்பதாவது:
அரசிதழ் பதிவு பெறாதா, தகுதி உள்ள அனைத்து ரெயில்வே ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு 78 நாட்கள் சம்பள் போனசாக வழங்கப்படும். போனஸ் தொகை கால தாமதமின்றி உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம் இதன்மூலம், 12.3 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.