தென் மாநில கவர்னர்களில் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளதாக தகவல்
தென் மாநில கவர்னர்களில் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
தென் மாநில கவர்னர்களில் ஒருவர் மீது பாலியல் புகார் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்று உள்ளது. புகாரின் உண்மைத்தன்மையை அறிய விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கவர்னர் மாளிகையில் பணிபுரியும் பெண் பணியாளரை பாலியல் உறவுக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது, இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என தகவல் தெரிவிப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக இதுவரையில் உள்துறை எந்தஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்த குற்றச்சாட்டுக்களை மிகவும் முக்கியமானதாக மத்திய அரசு எடுத்துக் கொண்டு உள்ளது, எந்தஒரு ஆதாரமும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய விசாரணை முகமைகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. தெரிவிக்கப்பட்டு உள்ள புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதும் சம்பந்தப்பட்ட கவர்னர் பதவியைவிட்டு ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்ளப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. புகார் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கி முன்னெடுத்து வருகிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆளுநர் மீது தெரிவிக்கப்பட்டு உள்ள பாலியல் புகார் உண்மையென தெரியவந்தால் மத்தியில் உள்ள பா.ஜனதா கூட்டணி அரசுக்கு பெரும் தர்ம சங்கமாக அமையும், எனவே அவரை உடனடியாக ராஜினாமா செய்ய அரசு உத்தரவிடும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் மேகலாயா கவர்னர் சண்முகநாதன் இதேபோன்று பாலியல் புகாரில் சிக்கினார். அவருக்கு எதிராக கவர்னர் மாளிகை ஊழியர்கள் அனைவரும் புகார் தெரிவித்தனர், அவர் பதவியை ராஜினாமா செய்தார். சண்முகநாதனை திரும்ப பெற வேண்டும் என 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி இருந்தனர்.