கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. #INXMediaCase #SupremeCourt

Update: 2018-03-13 06:19 GMT

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், கடந்த 28-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.  சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் 12 நாட்கள்  தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கார்த்தி சிதம்பரத்தின் சிபிஐ காவல் நேற்று முடிந்ததையடுத்து, நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை வரும் 24 ஆம் தேதி நீதிமன்றக்காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் அண்மையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், வரும் 20 ஆம் தேதிவரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிப்பதாகவும், மனு மீதான விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைப்பதாகவும் மார்ச் 10 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 

மேலும் செய்திகள்