ரெயில் மோதி 4 யானைகள் பலி
ஒடிசா மாநிலத்தில் ரெயிலில் அடிபட்டு 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. #OdishaElephantsDeath
ஜர்சுகுடா,
ஒடிசா மாநிலத்தின் ஜர்சுகுடா மாவட்டத்தில் பகடிஹி காட்டுப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 யானைகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து வனத்துறை பாதுகாவலர் கூறுகையில்,
”தெலடிஹி அருகே ஹவுரா-மும்பை ரெயில் வழித்தடத்தில் இந்த சோகமாக சம்பவம் நடந்துள்ளது. இரண்டு தந்தமுள்ள யானைகள், இரண்டு பெண் யானைகள் என மொத்தம் 4 யானைகள் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளன. வனப்பகுதியின் அருகே திரிந்து கொண்டிருந்த யானைகள் ரெயில் வருவதறியாது, தண்டவாளத்தை கடக்கும் போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்தில் ரெயிலில் அடிபட்ட யானைகள் தண்டவாளத்திலிருந்த்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டன. சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் விரைந்து வந்து யானைகளின் உடல்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
இவ்விபத்தினால் ஹவுரா-மும்பை ரெயில்வே வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில ரெயில் நிலையங்களில் ஆங்காங்கே ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன” எனக் கூறினார்.