சிறுமியின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

திரிபுராவில் 9 வயது சிறுமியின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. #Tripura

Update: 2018-06-22 06:20 GMT
அகர்தலா,

பழங்குடி இனத்தினைத் சேர்ந்த 9 வயதான சிறுமி சுமதி திரிபுராவின் தன்சேரா பகுதியில் வசித்து வருகிறார். அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் அவரின் குடும்பத்தினருடன் ஈடுபட்டிருந்தார்.

ஏற்கனவே கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவினால் பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது மண்சரிவை அறியாத நிலையில் தரம் நகரிலிருந்து தன்சேரா வழியாக அகர்தலாவுக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

ரயில் வருவதை கவனித்த சிறுமி சுமதி உடனடியாக தனது சட்டையைக் காட்டி ரயிலை நிறுத்துமாறு சைகை செய்தார். இதனை கவனித்த ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். சிறுமி சுமதியின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பயணம் செய்த 2000க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.

சிறுமியின் செயலை பாராட்டி, அவரின் பெயரை ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை செய்யவும், அந்த சிறுமியின் தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. பழங்குடியின சமூக நலத்துறை அமைச்சர் மேவார் குமார் ஜமாடியா சிறுமியின் தந்தையிடன் ரூ .50,000 வழங்கினார். ரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் செய்திகள்