கதுவா கற்பழிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பாதுகாப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கதுவா கற்பழிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு காஷ்மீர் அரசு பாதுகாப்பு அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-09 22:30 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி ஒருத்தி கடந்த ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணை ரகசியமாக நடத்தப்படவேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களை பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் சிறைக்கு மாற்றக்கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு “அன்றாட விசாரணை நடத்துவதற்கு ஏற்ப பயண நேரத்தை குறைக்கவேண்டும். குற்றவாளிகளை சந்திக்க அவர்களது உறவினர்களுக்கு உரிமை உண்டு. இதற்கான எல்லா உதவிகளையும் காஷ்மீர் அரசு செய்து தரவேண்டும். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் ரகசியமாகவே நடத்தப்படவேண்டும் என்று நாங்கள் பிறப்பித்த முந்தைய உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை. கோர்ட்டுக்கும், வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்