ஜம்மு காஷ்மீரில் முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் பதவியேற்றுள்ளார். #GitaMittal
ஸ்ரீநகர்,
உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளை மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமனம் செய்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்த நியமனங்கள் செய்யப்பட்டன.
அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த கீதா மிட்டல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் இன்று காலை பதவியேற்றார். முன்னாள் முதல்வர்கள் ஃபரூக், உமர் அப்துல்லா, ஆளுநரின் சிறப்பு ஆலோசனை குழுவினர் கலந்து கொண்ட பதவியேற்பு விழாவில் ஜம்மு ஆளுநர் நரேந்தர் நாத் வோஹ்ரா முன்னிலையில் கீதா மிட்டால் பதவியேற்று கொண்டார்.
முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி தலைமை நீதிபதி கோர்லா ரோகிணியின் ஓய்வுக்கு பிறகு, டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த கீதா மிட்டல் பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார்.