திருப்பதி அருகே செம்மரம் வெட்டச் சென்ற தமிழர் கைது

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதை தடுப்பதற்காக ஆந்திர அரசு சிறப்பு அதிரடிப்படையை அமைத்து உள்ளது.

Update: 2018-08-26 21:30 GMT

திருப்பதி,

திருப்பதி அருகேயுள்ள நாகபட்லா பகுதியில் நரசிங்கபுரம் ரெயில் பாலம் அருகே இப்படையினர் நேற்று முன்தினம் இரவு  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது செம்மரங்களை வெட்டுவதற்காக சிலர் அங்கிருந்த வனப்பகுதிக்குள் நுழைய முயன்றனர். மரங்களின் பின்னே பதுங்கியிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். இதனால் செம்மரங்களை வெட்ட வந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த கோடரி, ரம்பம், அரிவாள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை போட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆனால், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா புதூர்நாடு கிராமத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவர் மட்டும் அவர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை அதிரடிப்படையினர் கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்