காஷ்மீரில் கொடூரம்: 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

காஷ்மீரில் 9-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

Update: 2018-09-05 05:41 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் 9 -வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த 9-வயது சிறுமியின் உடலை, அங்கு இருந்த வனப்பகுதியில் இருந்து கண்டெடுத்தோம். 

இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் எங்களுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தையின் முதல் மனைவியின் 14-வயது மகன் மற்றும் அவனது நண்பர்களால் கூட்டு பாலியல்  வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அடித்துக்கொல்லப்பட்டுள்ளாள். கூர்மையான ஆயுதங்களால் கண்களை தோண்டி எடுத்தும், பின்னர் திராவகத்தை ஊற்றி உடலை சிதைக்கவும் செய்துள்ளனர்.  பின்னர், அங்கு இருந்த புதர் ஒன்றுக்குள் மரக்கிளைகள் உள்ளிட்டவற்றை வைத்து உடலை மறைத்து போட்டுச்சென்றுள்ளனர். 

சிறுமியின் தந்தையின் முதல் மனைவி தூண்டுதலோடு, அவரது மகன் இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளது எங்களுக்கு முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது கணவர், இரண்டாவது மனைவி அவரது பிள்ளைகளுடன் நெருக்கமாக இருந்ததால், பொறாமை காரணமாக, சிறுமியை கொலை செய்ய, முதல் மனைவி முடித்து எடுத்துள்ளார் என்பதை எங்களது சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. சிறுமியை கொல்ல பயன்படுத்திய கூர்மையான ஆயுதம் மற்றும் ஆசிட் வைக்கப்பட்டு இருந்த கேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14-வயது சிறுவன், அவனது தாய், மற்றும் நண்பர்களை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்” இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்