பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் இன்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் தொடர்ந்து 2-வது நாளாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. #KashmirTrain

Update: 2018-09-16 06:49 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் சவுகாம் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் போலீசாருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பாதுகாப்பு படையினர் விடியவிடிய பயங்கரவாதிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை அவர்கள் நெருங்கினர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டனர்.

சிறிதுநேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பாதுகாப்பு படையினர் காயம் இன்றி உயிர்தப்பினர். முன்னதாக குல்காம் மற்றும் அனந்த்நாக் பகுதியில் ரெயில் போக்குவரத்தும், இணையதள சேவையும் நேற்று நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தெற்கு காஷ்மீரில் இன்றும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாட்காம்- காசிகுந்த்- அனந்த்நாக் பகுதிகளுக்கு இயக்கப்படும் ரெயில்களும், வடக்கு காஷ்மீரில் ஸ்ரீநகர்- பாட்காம், பாரமுல்லா ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் ரெயில்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மூத்த அதிகாரிகள் ரெயில்களை இயக்க உத்தரவு பிறப்பித்த பிறகே வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் ரெயில்கள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்