காங்கிரஸ் மீது மாயாவதி தாக்கு; கர்நாடகா அமைச்சரவையிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. விலகல்

காங்கிரஸ் கட்சியை மாயாவதி விமர்சனம் செய்த நிலையில், கர்நாடகா அமைச்சரவையிலிருந்து அவருடைய கட்சி எம்.எல்.ஏ. விலகியுள்ளார்.

Update: 2018-10-11 15:12 GMT

பெங்களூரு, 

 
பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. கொள்ளேகால் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் என்.மகேசுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அவருக்கு மிக முக்கியமான பள்ளி கல்வித்துறை இலாகா ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் இடையே இருந்த கூட்டணி சுமுக உறவில் திடீரென்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். இதனையடுத்து கர்நாடகத்தில் மந்திரி என்.மகேஷ் காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக விமர்சிக்க தொடங்கினார். இந்நிலையில் முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் சந்தித்து பேசிய மந்திரி என்.மகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை வழங்கினார்.
 
சொந்த காரணங்களால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் என்.மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக குமாரசாமிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீடிக்கக்கூடாது என்ற காரணத்தினால், மாயாவதி உத்தரவின்படி என்.மகேஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றும், கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமாவுக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று என்.மகேஷ் கூறியுள்ளார். ஆட்சிக்கு ஆதரவு தொடரும் எனவும் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்