குஜராத் தலைமை செயலகத்திற்குள் புகுந்த சிறுத்தை புலியால் பரபரப்பு

குஜராத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்திற்குள் சிறுத்தை புலி ஒன்று புகுந்து பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-11-05 09:32 GMT
அகமதாபாத்,

குஜராத்தின் காந்திநகரில் சச்சிவாலயா அல்லது தலைமை செயலகம் அமைந்துள்ளது.  இங்கு முதல் மந்திரி மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரது அலுவலகங்கள் அமைந்துள்ளன.  பிற மந்திரிகள், மூத்த அதிகாரிகள் ஆகியோரது அலுவலகங்களுடன் அரசு துறைகளும் அமைந்துள்ளன.

சட்டசபை கட்டிடமும் இங்கு அமைந்துள்ளது.  இதனால் அதிக பாதுகாப்பு மிக்க பகுதியாக இது உள்ளது.  இந்த நிலையில், பூட்டப்பட்ட கதவின் அடிப்பகுதி வழியே சிறுத்தை புலி ஒன்று சச்சிவாலயா வளாகத்திற்குள் இன்று காலை புகுந்துள்ளது.  இது சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது.

இதனை தொடர்ந்து வன துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதுபற்றி அவர்கள் கூறும்பொழுது, சிறுத்தை புலி தனது வழியை மறந்து இந்த பகுதிக்குள் வந்திருக்கலாம்.  அதனை நாங்கள் பிடிப்போம்.  அல்லது வளாகத்தில் இருந்து வெளியேறுவதனை உறுதி செய்வோம் என கூறினர்.

அதனை பிடிக்கும்வரை செயலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வளாகத்திற்குள் வரவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்